Saturday, 8 September 2012

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று ஆரம்பம்!

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று ஆரம்பம்! 

இந்தியாவின் 100 ஆவது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் இன்று வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படி காலை 6.51 am இற்கு ஆந்திராவின்

சிறீ ஹரி கோட்டா ஏவு தளத்தில் ஆரம்பமானது.
பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தயாரிக்கப் பட்ட இரு செய்மதிகளை ஏவிக் கொண்டு பூமியின் துருவப் பகுதிக்கு மேலே செல்லக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்திய ராக்கெட்டான PSLV 21 (Polar Satellite Launch Vehicle), எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.51 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இந்த இரு செய்மதிகளில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 15 Kg எடையுள்ள செய்மதி 'ப்ராய்டரஸ்' எனவும் பிரான்ஸில் தயாரிக்கப் பட்ட 712 Kg எடையுள்ள செய்மதி 'ஸ்பாட் 6' எனவும் பெயரிடப் பட்டுள்ளது.
ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுனின் போது இவற்றில் திரவ நிலையில் எரிபொருள் நிரப்பப்படுவதுடன் கட்டுப்பாட்டுப் பிரிவு சரியாகத் தொழிற்படுகிறதா என்ற கண்காணிப்பும் இடம் பெற உள்ளது.

இஸ்ரோவினால் இதுவரை ஏவப்பட்ட செய்மதிகளிலேயே மிக அதிக எடையுடைய செய்மதி இம்முறை ஏவப்படும் பிரான்ஸின் 'ஸ்பாட் 6' என்பது குறிப்பிடத்தக்கது. 1975 ஆம் ஆண்டு 'ஆர்யபட்டா' செய்மதியை ஏவியதன் மூலம், இந்தியா விண்வெளித் துறையில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தது. இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்தியா 62 செய்மதிகளையும் 37 ராக்கெட்டுக்களையும் தயாரித்துள்ளது.

மேலும் PSLV ரக ராக்கெட்டு மூலம் இதுவரை ஏவப்பட்ட 54 செய்மதிகளில் 53 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. மேலும் இஸ்ரோ இதுவரை 27 வெளிநாட்டு செய்மதிகளையும் விண்ணில் ஏவியுள்ளது. இச் செய்மதி விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment